Sunday, November 9, 2008

ஈழம் எதிர்காலம் - கவிதை

ஈழம் எதிர்காலம்
கவிபாஸ்கர்

சமூகவியல் பாடத்தில்
ஈழப் போராட்டத்தை
மனப்பாடம் செய்து
ஒப்பிக்கும் போது
குண்டுகளால் காயம்பட்ட
பள்ளிக்கூட சுவர்கள் சொல்லும்
மாணவர்களிடம்
சிங்களன்
சுவரை சுட்டுத்
தோற்றுப் போனது...

தீயில் எரிந்தும்
உயிரோடு பிழைத்த
நூலக நூல்கள் சொல்லும்
படிக்கும் வாசகர்களிடம்
தீயினால் சுட்டப்புண் இது...

வழிபடுகிற பக்தர்களிடம்
உடைந்து நொறுங்கிய
தேவாலயம் சொல்லும்
தமிழீழ விடுதலைப் போராளிகளே
கடவுள் என்று...

பழைய பனைமரத்தின் உச்சியில்
புதிய வாகைப்பூ பூக்கும்
போருக்காய் குடியிருந்த
பதுங்குக் குழிகளில்
தண்ணீர் நிரம்பி
மீன்கள் முட்டையிட்டு
குஞ்சு பொரிக்கும்...

விடுதலைக்குப் பிறகு முளைத்த
மரஞ்செடிக் கொடிகளின்
கிளைகள் யாவும்
துப்பாக்கி உருவத்தை
ஞாபகப்படுத்தும்...

அகதி என்றொரு வார்த்தை
இனி அகராதியில்
அனாதையாகிவிடும்...

வானத்தில் சிறகுவிரித்துப் பறக்கும்
செம்பகக் குருவிகள்
வான்ப்படைப் பறந்த
ஒத்தையடிப் பாதையில்
பறந்து போகும்...

சாக்காடாய் கிடந்த மண்
பூக்காடாய் மாறும்
ஈ.மு. ஈ.பி.
வரலாறு எழுதப்படும் போது....

Wednesday, September 24, 2008

இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்

இந்து முன்னணிக்கு த.க.இ.பே. கண்டனம்

தமிழகத்தில் சமீபகாலமாக பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் வன்முறைகளை நிகழ்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்து முன்னணி போன்ற பார்ப்பனிய இந்துத்துவ அமைப்புகள் இதனை முன்னின்று நடத்துகின்றன.

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் சீமானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, கற்கள், சோடாபாட்டில்களை வீசி வன்முறையில் பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள இறங்கினர். இதில் பெரியார் தி.க.வை சேர்ந்த தோழர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புகாரின் பேரில் இந்து முன்னணியினர் மீது கொலைமிரட்டல், தாக்குதல், கல்வீச்சு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

23-09-2008 அன்று இரவு போரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் பலர் தாக்கப்பட்டனர். இதில் காவல்துறையினரும் தாக்குதலுக்கு உள்ளனார்கள். இது தொடர்பாக காவல்துறை இந்து முன்னணியினர் இருவரைக் கைது செய்துள்ளது.

இது மட்டுமல்லாது தமிழகமெங்கும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற
பார்ப்பனிய இந்துத்துவ வெறி அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை முஸ்லிம், கிருத்துவர்கள் மீது மட்டுமல்லாது பெரும்பான்மையாக உள்ள இந்துமதத்தில் பிறந்த தமிழர்கள் மீதும் இவ்வமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த போக்கை இனியும் அனுமதிக்காமல் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். முற்போக்கு இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள்
இணைந்து பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்களின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து போராட முன் வரவேண்டும்.
 
தோழமையுடன்,
கவிபாஸ்கர்,
செயலாளர்,
தமமிழ்க் கலை இலக்கியப் பேரவை

Tuesday, June 3, 2008

வலி உணரு

வலி உணரு
கவிபாஸ்கர்

கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..

பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..

அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....

கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்

அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...

வலி உணரு - கவிபாஸ்கர்

வலி உணரு
கவிபாஸ்கர்

கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..

பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..

அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....

கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்

அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...


 

Sunday, February 24, 2008

மொழிப்போர் நாளில் சிறையில் எழுதிய கவிதை

சிறையில் உடைத்த செந்தமிழ்
கவிபாஸ்கர்

என்
இனத்தின் சொத்து;தமிழுக்கு
சேதம் விளைவிக்கிறது
இந்தி, ஆங்கிலம்

நாங்கள்
பொதுச்சொத்தை
சேதம் செய்ததாய்
எங்களை பொய்வழக்கு
அழைக்கிறது...

இரவு பண்ணிரென்டு மணி
இரும்புக் கதவு
இருமாப்பாய் நின்று கொண்டு
சிறைக் கொட்டடிக்கு
வரவேற்றது...

ஆடையை கழட்டி
அடையாளம் கேட்டன
காக்கிச் சட்டைகள்
அணிந்த ஆடையை
கழட்ட மறுத்தோம்
சாதியை கேட்டதும்
சொல்ல மறுத்தோம்

வரிசையாய்
நிற்க வைத்து
கருப்பு இருட்டுக்குள்
அழைத்துச் சென்றார்கள்
கம்பிகளால்
கட்டப்பட்ட வேறோரு
தேசம் - சிறை...

தள்ளினார்கள்
தடுமாறி உள்ளே புகுந்தோம்

நிற்பதற்கே இடமில்லை
குற்றங்கள் செய்த
மனிதக் கும்பல்
கும்பகரணத் தூக்கத்தில்
குறட்டை விட்டன...
தூங்க இடமின்றி
தூங்கினோம்...

பீடிப்புகை
நுரையீரலில்
ஆணி அடித்தது
கஞ்சா நெடி
மூளையின் முகவரி
கேட்டது

கழிவறை நாற்றம்
மூக்குத் துளையில்
ஊசிப்போட்டது
இருமல் சத்தம்
காதுகளைத் திருகி
காயம் செய்தது..

விடியவே இல்லை
தட்டி எழுப்பினார்கள்
உட்கார வைத்து
கணக்கு பார்த்தனர்
குற்றங்கள் செய்த
கூட்டத்திற்கு நடுவில்
நாங்களும் நிரம்பினோம்

சாப்பிடுவதற்கு
தட்டுயில்லை
குடிப்பதற்கு குளிப்பதற்கு
குவளையில்லை...

'போராட்டம்' செய்து
உள்ளே வந்தோம்
உள்ளே சென்று
போராடினோம்
உணவை மறுத்து...

தேநீர்
நிறமிழந்த தேநீரை
சாப்பிடும் தட்டில்
குடித்தோம்
குடிக்கும் குவளையில்
குழம்பும்
குளிக்கும் குவளையில்
சோறுமாய் - துருபிடித்த
உணவை கூடி உண்டோம்

தூக்கத்தை
யாரிடமாவது
கடனாய் வாங்கி
தூங்கலாம் போலிருந்தது

கொசுக்களுக்கு
இரத்தம் கொடுத்தோம்
ஆயுள் கைதிகளுக்கு
ஆறுதல் சொன்னோம்

செய்யாத தவறுக்கு
செத்து வாழும்
மனிதருக்கு - நம்பிக்கை
உயிர் கொடுத்தோம்
இருந்த நாளில்
இதயம் மலர
மனிதம் வளர்த்தோம்

கொலை, திருட்டு
கற்பழிப்பு, சாராயம்
'நிபந்தனையின்றி'
வரிசையாய் - உள்ளே
வலம் வருகின்றன

இந்தியை, ஆங்கிலத்தை
தார்பூசி அழித்த
என் செம்மைத் தமிழ்
பூட்டியக் கதவை
உடைத்துக் கொண்டு
'நிபந்தனையில்'
வெளியே போராட வருகிறது
----------------------------------------------------------------
மொழிப்போர் நாளில் தஞ்சை அஞ்சல் மற்றும் தந்தி தலைமை அலுவலகத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி மற்றும் ஆங்கில எழுத்துகளை தார்பூசி அழித்த போராட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி நடுவண் சிறையிலடைக்கப்பட்ட போது எழுதிய கவிதை (25-02-2008).
நன்றி : தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2008 மாத இதழ்

வெளிவந்துவிட்டது!

கவிஞர் கவிபாஸ்கரின்

சூரியனைக் கொளுத்தியத் தீக்குச்சி

(கவிதைத் தொகுப்பு)

அய்யா நிலையம் வெளியீடு

விலை ரூ.40/-